ஒரு குருவிடம் ஒருவன் வந்தான்.
“குருவே. என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக் கொண்டே இருக்கின்றது” என்றான் வந்தவன்.
“அப்படியா?”
“ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றான். எந்தக் கவலையும் இல்லாது இருக்கின்றான். எப்படி என்றே தெரியவில்லை என்றான். என்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்றான்.”
குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
“இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்” என்றார்.
குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.
“குருவே, அவன் நிம்மதியே போச்சு.”
“அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே…”
“அதான் பிரச்சனையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியாகி விட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.”
“இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?” என்றார் குரு.
மறுமொழி இடவும்